தமிழகத்தை முன்மாதிரியாக்க முடியும்: மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் ஜெயலலிதா

           மக்கள் நல்வாழ்வு உள்கட்டமைப்பு ஆகியவற்றில் வலுவான அடித்தளமும், வளர்ச்சியும் கைகோர்த்தால் தமிழகம் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டை இன்று காலை தொடங்கி வைத்து பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை ஆக்குவது சாத்தியமானதுதான் என்று குறிப்பிட்ட ஜெயலலிதா, இதை நடைமுறைப்படுத்துவது மாவட்ட ஆட்சியர்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும் கூறினார். அந்தப் பொறுப்பை அவர்கள் உளமாற நிறைவேற்றுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் சொன்னார்.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அமைதி மற்றும் ஸ்திரதன்மையின் மீது நம்பிக்கையுடன் வளர்ச்சியைக் கட்டி எழுப்ப முடியும் என்று குறிப்பிட்ட ஜெயலலிதா, வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதோடு மக்களுக்கு சமநீதியும் வாங்கப்பட வேண்டும் என்றார்.
வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறை ஆகியவற்றில் இந்த அணுகுமுறை கடைபிடிக்கப் பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
-பசுமை நாயகன்