2013 -14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வியாழக்கிழமை  தாக்கல் செய்யப்படுகிறது. இதனை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாட்டில் நிதிப்பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இதை கட்டுக்குள் கொண்டு வருவது இந்த பட்ஜெட்டில் அவர் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் என கூறப்படுகிறது.
அதே சமயம், அதிகரித்து வரும் விலைவாசி பிரச்னைக்கும் தீர்வு கண்டாக வேண்டிய நிலையில் அவர் உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் இந்த பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக்கூடும் என எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் சிதம்பரம் புதன்கிழமை வெளியிட்டார்.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.2 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதத்துக்குள் இருக்கும் என இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.1 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.