நிதி ஒதுக்கீடு, பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் என்று அதிதீவிரமாக நீடித்த பட்ஜெட் தாக்கலின்போது சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறின.

மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் சிதம்பரம், பாலியல் வன்கொடுமைக்கு பலியான டெல்லி மாணவியை நினைவுபடுத்தும் வகையில் நிர்பயா நிதியம் தொடங்குவதாக அறிவித்தார்.
அப்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி பெண் எம்.பி.கள் தங்களது வரவேற்பை தெரிவித்தனர்.
பெண்களுக்கென தனி வங்கிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் கைத்தட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.

ரயில்வே பட்ஜெட் போன்று பொது பட்ஜெட்டில் பெரிய அளவில் கூச்சல் குழப்பம் ஏதுமில்லை. 
நிதியமைச்சர் சிதம்பரம், தனது உரையின்போது முக்கிய தலைவர்களின் கருத்துகளை எடுத்துக் கூறினார்.
குறிப்பாக ஒரு நாட்டின் மிகப்பெரிய வளம், அந்நாட்டின் மக்கள்தான் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் ஜொசப் ஸ்டிக்லிட்ஸ்-ன் கூற்றை உதாரணப்படுத்தி பேசினார். மேலும் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பு, திருக்குறளை வாசித்தார்.
‘‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்‘‘

– இந்தக் குறளைச் சொல்லி  ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
தெளிவுடன் செய்யத் துணிந்ததைக் காலம் நீட்டாமல், தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.
உரையின் இறுதியாக, நீங்கள் விரும்பும் வலிமையும், உத்வேகமும் உங்களுக்குள்தான் இருக்கிறது, ஆகவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தையும் எடுத்துக்கூறினார் சிதம்பரம்.
ஒரு மணி நேரம் 47 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். 8 ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்வதை அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர்.
மிக முக்கியமாக பட்ஜெட் தாக்கலின்போது பல எம்.பி.க்கள் கொட்டாவி விட்டனர். ஒரு சில எம்.பி.க்கள் உறங்கியே விட்டனர்.