2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்
இழப்பு ஏற்பட்டதாக எழுந்த விவகாரத்தில் தணிக்கைத்துறையின் முன்னாள் தலைமை
இயக்குனர் ஆர்.பி.சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். தனியார்
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தொலைத் தொடர்பு அமைச்சகத்தின்
கணக்கு வழக்குகளை தாம் தான் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் தயாரித்த வரைவு தணிக்கை அறிக்கையில் நிதி இழப்பு பற்றி
குறிப்பிடவில்லை என அவர் கூறியுள்ளார். ஒரு சில நிறுவனங்கள் ஒப்பந்தத்தை
விட கூடுதலாக ஸ்பெக்ட்ரங்களை வைத்திருப்பது பற்றியும் அவர்களிடம் இருந்து
37 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கலாம் என்றும் தனது அறிக்கையில்
குறிப்பிட்டிருந்ததாக ஆர்.பி.சிங் தெரிவித்தார்.
மேலும் தேசிய அளவிலான உரிமத்துக்கு ஆயிரத்து 658 கோடி ரூபாய்
நிர்ணயிக்கப்பட்ட விவகாரத்திலும் கூடுதல் கட்டணத்தை பெறுவது குறித்து தனது
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஆர்.பி.சிங் சுட்டிக்
காட்டியுள்ளார்.
ஆனால் தனது அறிக்கையை தலைமை தணிக்கை அதிகாரியின் அலுவலகம்
திருத்திவிட்டதாகவும் வேறு வழியின்றி அதில் தாம் கையெழுத்திட்டதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். தலைமை தணிக்கை அதிகாரி மீது அத் துறையின் முன்னாள்
இயக்குனர் ஒருவர் குற்றம்சாட்டியிருப்பது புதிய சந்தேகங்களை
எழுப்பியுள்ளது.
-பசுமை நாயகன்