பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: முதலமைச்சர் ஜெயலலிதா

                  பாலியல் வன்முறை வழக்குகளை கொடுங்குற்றங்களாக கருதுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு “வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம்” செய்யப்படுவது; பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது ஆகியவை குறித்து சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை கேட்டுக் கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
“ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே” என்று பாடிய பாரதி பிறந்த இந்தியத் திருநாட்டின் தலைநகரில், ஒரு இளம் பெண் கொடூரமான, மிருகத்தனமான, காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் அனைவருக்கும் மிகுந்த துயரத்தையும், மனவேதனையையும் அளித்துள்ளது.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையிலும், உலகத்திற்கே முன்னோடியாக “அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்”, 1992 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கும் வகையில், “தமிழ்நாடு பெண்கள் இன்னல் தடுப்புச் சட்டத்தின்” கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளை 2002 ஆம் ஆண்டில் கடுமையாக்கப்பட்டது. இதன்படி, துன்புறுத்தலால் ஏற்படும் மரணம் மற்றும் தற்கொலை ஆகியவற்றில் குற்றம் அற்றவர் என்று மெய்ப்பிக்கும் பொறுப்பு குற்றவாளிகளைச் சார்ந்ததாக மாற்றி அமைக்கப்பட்டது.
இவை காரணமாக மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதிலும் குறிப்பாக, பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதே தமது விருப்பம் ஆகும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், கீழ்க்காணும் உத்தரவுகளை முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
1. பாலியல் வன்முறை வழக்குகள் கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, புலன் விசாரணை காவல் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு, காவல் துணைக் கண்காணிப்பாளர்களால் நேரடியாக மேற்பார்வை செய்யப்படும். இயன்றவரை இவ்வழக்குகளில் பெண் காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொள்ளவும், இயலாத சூழ்நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
2. இது தவிர, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத்தலைவர்கள் ஆகியோர் இவ்வழக்குகளின் விசாரணையை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய வழக்குகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் வழக்கு முடியும் வரை மாதந்தோறும் அவர்கள் ஆய்வு செய்வார்கள்.
3. தற்சமயம் புலன் விசாரணையிலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் அனைத்து பாலியல் வன்முறை வழக்குகளையும் மண்டல காவல்துறைத் தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும், இவ்வழக்குகளை விரைந்து முடிப்பதில் தீவிரம் காட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
4. பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காரணத்தினால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் வண்ணம் குண்டர் தடுப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்படும்.
5. பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6. இந்த நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞர்களாக பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.
7. பாலியல் வன்முறைக் குற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்புகளை பெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி, சாட்சி விசாரணைகள், வழக்கறிஞர்களின் வாதங்கள் ஆகியவற்றை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
8. பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் காவலுக்கு உட்படுத்தப்படும் காலம் ஒவ்வொரு தருணத்திலும் 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை 30 நாட்களாக சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் இருப்பதைப் போன்று உயர்த்துவது; இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் முன் ஜாமீன் பெறாமல் இருக்க வழிவகை செய்வது; இவ்வழக்குகளில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டால், வழக்கு விசாரணை முடியும் வரை அவரைப் பிணையில் விடுவதை தடை செய்வது; பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எனப்படும் “வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம்” செய்யப்படுவது; பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது ஆகியவை குறித்து சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படும்.
9. பாலியல் வன்முறை வழக்குகள், பெண்கள் இன்னல் தடுத்தல் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் சட்டம் 2012 ஆகியன குறித்து காவல் உயர் பயிற்சியகம் , காவலர் பயிற்சி பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில், பாலியல் வழக்குகளில் சரியான விசாரணை நடத்துவது பற்றி மட்டுமின்றி, இக்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை கனிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துவது குறித்தும் போதிக்கப்படும்.
10. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களுடைய மருத்துவச் சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதுடன், அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும்.
11. பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் உதவி செய்யும் வகையில் இலவச தொலைபேசி அழைப்பு சேவை இயங்கி வருவது போல், ஆங்காங்கு தனித்தனியே இயங்கும் பெண்கள் உதவித் தொலைபேசி சேவை , ஒருங்கிணைந்த சேவையாக தொண்டுள்ளம் கொண்டவர்களையும், பெண்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்களையும், அல்லாடும் மகளிருக்கு ஆலோசனை அளிக்கும் பயிற்சி பெற்றவர்களையும் உள்ளடக்கிய அமைப்பாக நிறுவப்படும்.
12. சென்ற ஆண்டு நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 14.12.2012 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பெண்களுக்கு இன்னல் தரும் நபர்கள் அல்லது அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
13. மேலும், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடியவர்களின் நடமாட்டத்தைச் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பர்.
பெண்களின் பாதுகாப்பிலும் அவர்களை கண்ணியத்துடன் நடத்துவதிலும் தங்களுக்கும் கடமை உள்ளது என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

-இணைய செய்தியாளர் - s.குருஜி